Thursday, May 24, 2012

மலர்ந்தும் மலரா மலர் போலே!!!


உள்ளுக்குள் ஆயிரம் கனவுகள் ஏந்தி நின்ற,
உன் விழிகளில் ஒய்யாரமாய், ஒரு ஓரமாய் நானின்ற நொடிகளில்..
இளங்காற்று வீசி தேகம் சிலிர்க்க வைத்த நேரத்தில்,
தூரத்தில் பசுமையாய் தெரிந்தது வாழ்க்கை...உன் வரவாள்...

கள்ளமில்லா சிரிப்பு, மயக்க வைக்கும் பார்வை..
நீ அதிர வைக்கும் பாவை...
என் தேசத்து மலரெல்லாம் சொல்லுதே உன் நாமம் என் செவியுணர...
எங்கே சென்றேனும் தொடருதே உன் ஞாபகம்...
மனதில் பிணியாய் அழிவில்லா வேதனை...

அந்தி மாலை வேளை, சற்றென்று மாறிய வானிலை..
பண்ணீர் தெளித்தது மேகம்...மழையில் கரைந்ததென் தேகம்...
வாசல் பார்த்து நின்றேன் உன் வரவுக்காக,
மனவாசல் மூடி வைத்தேன் ; அது உனக்காக...

எம்மொழியில் சில வரிகள்-கண்ணில் சில துளிகள் : இது காதல் தானா?

சலங்கை குளுங்கும் பேச்சாலே!
மின்னல் வெட்டு சிரிப்பாலே!
மலர்ந்தும் மலரா மலர் போலே!
என் நெஞ்சைத் தொட்டுப் போனது யார்?

விரிந்த வானம், ஓடும் நதி, மலர்ந்த சூரியன் வீசும் தென்றல்,
என் நாசிக் கவர்ந்த சோலை என..
இயற்கை மடியில் தவழ்ந்த என்னை,
மங்கை மடி இழுத்தது யார்???

தென்றல் அணைக்க
தாயவள் தாலாட்டி ஈன்றவன் தலைக்கோத
சுகமாய் நித்திரைக் கொண்ட நொடிகள் எங்கே போனது?
அவளைக் கண்டதும் கண்கள் விரதம் பூண்டது...
ஏனோ உறங்க மறுக்குது!!!

சொல்லோடு விளையாட்டு தமிழில் தாலாட்டு
இதமாய் ஒரு பாட்டு செவியில் அதைக் கேட்டு
மகிழ்ந்த தருணங்கள் எங்கே?

தோழன் தோள் பற்றி
கதைகள் யாம் உரைக்க,
சிதரிய சில்லரையாய் சிரிப்புகள் உதிர்ந்த வசந்தக் காலம் எங்கே?

தனிமையில் நானிருக்க,
உள்ளத்தின் வலிதன்னை
பேனா மைச்சுமக்க காகிதம் பாரமானது...
இன்று மீண்டும் கையில் கோலெடுக்க
வலியில் உதிர்ந்தது வரிகள் ; அருகில் அவளில்லை...
சிலுவையில் அரைந்த இயேசுவாய் ஞாபகங்கள் என் நெஞ்சில்...

No comments:

Post a Comment